புதன், 24 ஏப்ரல், 2013

மற்றவர் மீதான மனக் கசப்பு அகன்று போக காத்திருங்கள்!


யார் மீதும் மனக்கசப்பு, வைராக்கியம், விரோதம் வைக்கக்கூடாது (யாக்.3:14). அப்படி ஏதாவது பாவம், இருதயத்தில் இருக்கும் பட்சதில் அவர்களுக்கு சொர்கத்தில் இடமில்லை. நடைமுறை வாழ்க்கையில் யாருடனும் உரசல் இல்லாமல் வாழ முடியாது. அலுவலகம், வெளியிடங்களில் மற்றவருடன் எதிர்பாராமல் சண்டை, வாக்குவாதம் வரக்கூடும். பிறவக்குணம் என்று கூறப்படும் ஜென்ம சுபாவங்கள் நீங்கப் பெற்றவனே இந்த சந்தர்ப்பங்களிலும் பாவம் செய்யாமல் தப்புவான்.

யாருடனாவது கருத்து வேறுபாடு ஏற்படும் போது எதிராளி செய்யும் தவறுகளை மனதில் வைத்துக் கொள்கிறோம். அந்தத் தவறுகளை மன்னிக்காமல் இருப்பதால் அவருக்கு எதிரான கசப்பும், விரோதமும், வைராக்கியமும் ஏற்பட்டுவிடுகிறது. இது நாளடைவில் வளர்ந்து வளர்ந்து, அந்த நபரை முற்றிலும் வெறுக்கக் கூடிய நிலைக்கு கொண்டு செல்கிறது. அப்படிப்பட்ட இருதயத்தை இறைவன் விரும்பவில்லை. அவை நீக்கப்பட்டு, இருதயம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம் (எபே.4:31).

செத்த பிராணிகள் அகற்றப்படாமல் கிடந்தால், அந்த இடத்தை சுற்றி துர்நாற்றம் வீசும். பிணம் நாறுவது மட்டுமல்ல, அதை சுற்றி இருக்கும் இடத்தையும் அந்தப் பிணம் நாறச் செய்யும். அதுபோல் தான் இருதயத்திலும் இருக்கிற கெட்ட குணங்களும் அவனை அப்படியே செய்யும். யார் மீது பகை வைத்து இருக்கிறோமோ அவரைப் பற்றி வேறொருவருடன் பேசும் போது எரிச்சலான கெட்டவார்த்தைகள், கோபமான சிந்தனைகள் போன்ற நாற்றமெடுக்கும் தன்மைகள்தான் வெளிப்படும். அவரைப் பற்றி சிந்தனைசெய்யும்போதும் கெட்ட சிந்தனைகள் தான் நிழலிடும். இயேசுவுக்கு எதிராக எத்தனையோ பேர் செயல்பட்டபோதும் கூட, தனது இருதயத்தில் அவர்களைப் பற்றி இப்படிப்பட்ட தன்மையை ஓருநாளும் அவர் வைத்திருந்ததில்லை.

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள், அவர்கள் இருதயத்தில் ஒருவரைப் பற்றி ஒருவருக்கு கசப்பை ஏற்படுத்திவிடும் (கொலோ.3:19). இது காலகாலமாக அப்படியே இருந்து வைராக்கியமாக மாறிவிடும். இவர்களுள் ஒருவர் எதைச் செய்யதாலும் அது மற்றவருக்கு குற்றமாகவே தோன்றும். அதனால் எப்போதும் சண்டையும் சச்சரவுமே அந்த வீட்டில் நிலையாக இருந்துவிடும். பின்னர் பிரிவு வரை செல்ல வைத்துவிடும். மனக்கசப்பையும் அதன் தொடர்ச்சியாக சண்டை சச்சரவுகளையும் ஏற்படுத்துவது சாத்தானின் செயலே. இதற்கு நீங்கலானவர் எவரும் இல்லை.

அப்படியானால் இந்தப் பாவத்துக்கு நீங்கலாக இருப்பது எப்படி? யாரைப் பற்றியாவது மனக்கசப்பு வரும்போது  அதை நாம் என்றைக்காவது இயேசுவிடம் கூறி இருக்கிறோமா? மற்றவர்களுக்குத் தெரியாத அந்தக்கசப்பை இறைவன் அறிவார். அவர் இருதயத்தைப் பார்க்கிறவர் என்பதால், அதை நாம் மறைக்க முடியாது. மற்றவர்கள் மீதான கசப்பை ஒரு பாவமாக நாம் எண்ணாமல், இறைவனிடம் அதைப்பற்றி கூறாமலேயே விட்டுவடுகிறோம். அதுவே மிகப் பெரிய சண்டைகளுக்கும், இழப்புகளுக்கும் காரணமாகி விடுகிறது.

எனவே நமது இருதயத்தை நாம் சீர்தூக்கிப் பார்ப்பது நல்லது. ஆனால், ‘கசப்பு ஏதும் இல்லை’ என்று நமது இருதயமே நம்மிடம் பொய் சொல்லக் கூடும். நம்மால் நம்மை முழுமையாக அறியமுடியாது. நமக்கு சரி என்று தோன்றும் விசயங்கள் நடைமுறையில் தவறாக நடக்கவும் வாய்ப்புவுள்ளது. எனவே கசப்பை நீக்குவதற்கு இறைவனிடம் முழுமனதோடு கேளுங்கள். உரியகாலத்தில் அதுநீக்கப்படும். அதன் பிறகே இருதயம் குணப்படும். கசப்பு நீங்கும்வரைக் காத்திருங்கள். இப்படி ஒவ்வொரு பாவத்தையும் இருதயத்தில் இருந்து நீக்கிவிட்டால் ஆன்மிக வாழ்வு வெற்றியாக அமையும். மனிதன் இந்த ‘பூ’ உலகத்திலேயே இறைவனின் அருள் பெற்றவனாக இருக்கலாம் அதுவே சந்தோஷம்.

நன்றி – மனிதனின் அடையாளம்

ஒருவன் மனிதன் என்பதற்கு பல அடையாளங்கள் இருக்கின்றன. அவை அன்பு, பண்பு, பகுத்தறிவு, நேர்மை, உண்மை, நன்றி.

மனிதனுக்கு முதல் அடையாளம் பகுத்தறிவு, இரண்டாவது அடையாளம் நன்றி. இந்த இரண்டு அடையாளங்களும் இல்லாவிட்டால் மனிதத்தன்மை நிறைவுபெறாது.

மனிதனுக்கும் மிருகத்துக்கும் ஐந்து அறிவு உண்டு. படைப்புகளில் மனிதன் உயர்ந்தவன் என்பதால் அவனுக்கு அதிகபட்சம் கூடுதலாக ஒரு அறிவு வழங்கப் பட்டிருக்கிறது. அதுதான் பகுத்தறிவு.

மிருகத்துக்குப் பகுத்திறிவு இல்லை. அதனால் அதற்கு நல்லது கெட்டது தெரியாது. மனிதன் அப்படி அல்ல. அவனுக்குப் பகுத்தறிவு உண்டு. அதனால்தான் அவன் நல்லது கெட்டதை அறிகிறான். இந்த ஆற்றலை இறைவன் மனிதனுக்கு அருட்கொடையாக கொடுத்து இருக்கிறான். அதற்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்! நன்றி செலுத்துகிறோமா?

உலகெங்கும் இந்தக் கேள்விக்குப் பதில் கேள்விக்குறியாகவே இருக்கிறது. மனிதனுக்கு முழுஉருவம் கொடுத்து அவனை மனிதன் என்று உலகுக்கு அறிமுகம் செய்துவிட்டான் படைத்தவன். அவன் அந்த உயர் படைப்பபை தக்கவைத்துக்கொள்ள அவனுக்குப் பகுத்தறிவையும் அளித்துள்ளான்.

உலகில் எல்லா மனிதர்களும் பகுத்தறிவைப் பயன்படுத்துகிறார்களா? கேள்விக்குறியைக் கண்டுபிடித்த மேதைக்கு நன்றி!
உலக வாழ்வில் கேள்விக்குறிகள் இருவகைப்படும்.
மனிதனை நோக்கி  கேள்விக்குறி போனால் அவன் மனிதன் அல்ல. அவனிடமிருந்து கேள்விக்குறி போனால் அவன் மனிதன்.

ஒரு மனிதனை மனிதன் என்று சொல்ல அவனுடைய பகுத்தறிவுதான் காரணம்.
மனிதன் பகுத்தறிவை எப்படி வளர்த்துக்கொள்கிறான்? கேள்வி ஞான வழி. இதுதான் நிதர்சனமான உண்மை.

மனிதனைப் படைத்து அவனுக்குத் தேவையானவற்றை எல்லாம் படைத்து இருக்கிறான். அப்படிப்பட்ட இறைவனுக்கு மனிதன் நன்றி செலுத்துகிறானா?

செலுத்தினால் அவன் மனிதன். இல்லாவிட்டால் அவன் மனிதனே அல்ல.
மனித அடையாளங்களில் முதன்மையானது நன்றி. படைத்த இறைவனை வணங்குவது முதல் நன்றி. ஒருவன் செய்த உதவிக்கி பதில் உதவி செய்வது இரண்டாவது நன்றி!
இந்த இரண்டு நன்றிகளையும் யார் செய்கிறார்கள் என்றால் ‘நல்ல உள்ளம்’ படைத்தவர்கள்.

‘செடிகள், (கொடிகள்) மரங்கள் (முதலிய யாவும்) இறைவனுக்கு வழிப்பட்டு சிரம் பணிகின்றன’ (55:6) திருக்குர்ஆன்  கூறும் இந்த வசனம், ‘எங்களைப் படைத்து. எங்களுக்கு மழையை இறக்குகிற இறைவனுக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம்’  என்று மனிதனுக்குப் பாடம் சொல்லித்தருகிறது.
இறைவனுக்கு நன்றி செலுத்தி நம் வாழ்க்கையை நன்றியால் நிரப்பி மனிதனாக வாழ்வோமாக!

உங்கள் செயல்கள் நன்மையில் முடிய வேண்டுமா...?

இரண்டு தணிநபர்கள் கோபம் கொள்ளும்போது  அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு அடித்துக்கொள்வார்கள். இரு சமுதாயத் தலைவர்கள் கோபம் கொண்டால் இரு சமுதாயமும் மோதிக்கொள்ளும். இருநாட்டுத்தலைவர்கள் கோபம் கொண்டால் அது போரில் கொண்டுபோய் முடியும் ஆபத்தும் இருக்கிறது. அதனால் கோபம் என்ற நெருப்பை தண்ணீர் என்ற பொறுமையின் மூலம் அணைக்க நாம் பழகிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் தனி நபரில்லிருந்து தொடங்கி உலகம் முழுவதும் அமைதிப்பூங்காவாய் காட்சி அளிக்கும்.

இதைத்தான் திருக்குர்ஆனும் வலியுறுத்துகிறது. பொறுமையின் சிறப்பையும் அதன் அவசியத்தையும் வலியுறுத்தி பல இடங்களில் திருமறையில் வரும் சிறப்பு மிக்க அந்த வசனங்களில் சில...
நம்பிக்கை கொண்டாரே, பொறுமையை கைக்கொள்ளுங்கள். பொறுமையில் மற்றவரை மிகைத்து விடுங்கள். உறுதியாக நில்லுங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். வெற்றி பெறுவீர்கள். (திருக்குர் ஆன் 3:200).

பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும். (திருக்குர் ஆன்: 2:45).

ஒரளவு அச்சத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் பலன்களை சேதப்படுத்தியும் உங்களை சோதிப்போம். பொறுமையை கைக்கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக. (திருக்குர்ஆன்: 2:15).

அச்சம், பசி, இறப்பு, இழப்பு ஆகியவை ஏற்படும் போது பதற்றம் வரும், பொறுமையின் மூலம் இதை தடுத்துவிட்டால், அதன் பிறகு நிறைய நன்மைகள் நம்மை வந்து சேரும். இதைத்தான் மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் நமக்கு சொல்லிக்காட்டுகிறது.
நம்பிக்கை கொண்ட எனது அடியார்களே, உங்கள் இறைவனை அஞ்சுங்கள். இவ்வுளகில் நன்மை செய்தோருக்கு நன்மையே உள்ளது. அல்லாவின் பூமி விசாலமானது. பொறுமையாளர்களுக்கு கணக்கின்றி கூலி வழங்கப்படும் என்று (இறைவன்) கூறுவதை தெரிவிப்பீராக. (திருக்குர்ஆன்.39:10).

நம்பிக்கை கொண்டோரே பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (திருக்குர்ஆன்.2:153)

இவ்வாறு பொறுமையை வலியுறுத்தும் வசனங்கள் திருக்குர்ஆனில் நிரம்பிக்கிடக்கின்றன.

இறை நம்பிக்கையாளனுக்கு நடக்கும் எல்லா செயல்களும் நன்மையில்தான் முடிகின்றன. இந்த பாக்கியம் இறை நம்பிக்கையாளர்களுக்கு தவிர மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை. ஒரு இறை நம்பிக்கையாளன் மகிழ்ச்சி அடைந்தால் அவன் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான். அது  அவனுக்கு கூடுதல் நன்மையாகவும் ஆகிவிடுகிறது. ஒரு துன்பம் அவனை நெருங்கும்போது பொறுமையைக் கைக்கொள்கிறான். அதுவும் அவனுக்கு நன்மையாகவே மாறிவிடுகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

உனக்குள் ஓர் உன்மை


யாரோ தின்று முடித்து வீசி எறிந்த மாங்கொட்டையில் இருந்து ஒரு மாபெரும் விருட்சம் எழுகிறது. காக்கையின் எச்சத்தில் உள்ள சிறு விதையில் இருந்து ஒரு புதிய வேப்ப மரத்தின் வரலாறு ஆரம்பிக்கிறது.

வானமழையில் ஏதோ ஒரு துளி, தான் விழுவது எங்கென்று தனக்கே தெரியாமல் சிப்பிக்குள் விழுந்து முத்தாய் விளைகிறது.

வாசற்படியாகப் போகிறதோ? தெய்வச்சிலாயாகப் போகிறதோ?. இது எந்தக்கல்லுக்குதான் முன்கூட்டியே தெரியும்.

டிக்கெட் வாங்காமல் ரெயில் ஏறி பட்டணத்திற்கு வந்தவன், பின்னாளில் தேர்தலில் நிற்பதற்கான டிக்கெட் வாங்கும் அளவுக்கு உயர்ந்து விடுகிறான். ஊரைவிட்டு விரட்டப்பட்டவன், மேள வாத்தியங்களுடன் மாலை மரியாதையோடு பின்னாளில் வரவேற்கப்படுகிறான்.

இவையெல்லாம் எப்படி? எது எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும். அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஆனால், அதிர்ஷ்டம் கூட தகுதியின் அடிப்படையில் தான் கிட்டுகிறது. அதிர்ஷ்டம் என்பதை வாய்ப்பு என்றும் சொல்லலாம்.

இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் உழைப்பு முன்னேற்றத்திற்கான நடைமுறையாக இருக்கிறது. அதிர்ஷ்டம் வெறும் கற்பனையாக இருக்கிறது.

யார் என்ன சொன்னால் என்ன? எந்தச் சூழ்நிலை வந்தால் என்ன? நீங்கள் நீங்களாக இருங்கள். உங்களுக்குரிய வாய்ப்புகள், உங்களுக்குரிய எதிர்காலம் உங்களைத் தேடி வராமலா போய்விடும்.

நெப்போலியன் குடுப்பத்தில் வறுமைதான். குறைந்த பட்ச வசதிகள் கூட இல்லாத நிலை. மற்ற மாணவர்கள் அவனைப்பார்த்துக் கிண்டல் செய்வார்களாம். அப்போது தெல்லாம் நெப்போலியன் தனது புத்தகங்களுக்குள்ளேயே மூழ்கிவிவானாம்.

காலம் மாறியது. ஏளம் செய்த மாணவர்கள் வியக்கும் அளவிற்கு அறிவில் சிறந்தான். ஆற்றலில் சிறந்தான். பின்னர் உலகமே புகழும் மாவீரனாகத் திகழ்ந்தான் என்பது வரலாறு.

நெப்போலியன் தனக்குள் இருந்த தன்னை- அந்த உண்மையைக் கண்டு கொண்டான். வரலாற்றில் இடம் பிடித்தான்.

பீத்தோவன் என்றால் யாரென்று உலகம் நன்கறியும். மாபெரும் இசைமேதை. அவர் செவிடாகவும் துக்கத்தில் ஆழ்ந்தவராகவும் இருந்தபோது தான் தனது மிகச்சிறந்த இசைப்படைப்புகளை உருவாக்கினார்.

அந்த மாமேதை தனக்குள் தான் யாரென்பதைக் கண்டுக் கொண்டார். அந்த உண்மையை இசை வடிவங்களாய் வார்த்துக் கொடுத்தார்.

நம்மைப்பற்றி உலகம் என்ன நினைக்கிறது, என்ன சொல்கிறது என்பது விஷயமல்ல. நம்மைப்பற்றி நாம் என்ன நினைக்கிறோம், நம்மைப்பற்றி நம்முடைய உன்மையான மதிப்பீடு என்ன என்பதுதான் முக்கியம்.

ஹென்றிச் ஹீன், சென்ற ஙூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மானியப் புரட்சிக் கவிஞன், ‘I am the Sword: I am the flam’ என்று பாடினார்.

அவர் தனது மரணத்திற்கு முன்னால் இப்படி எழுதி வைத்துச் சென்றார்.

‘நான் இறந்தபின், என் சமாதியின் மீது மலர்களை வைக்காதீர்கள்; மாறாக ஒரு வாளை நட்டு வையுங்கள். ஏனெனில், நான் எப்போதும் மனித குலத்தின் விடுதலைக்குப் போராடிய போராளியாகவே இருந்தேன்’.

அந்தக் கவிஞன் தன்னைத் தெரிந்திருந்தான். அதனால்தான், தான் யாரென்பதை உலகிற்கு அவனால் சொல்ல முடிந்தது. நம்மை நாம் அறியாவிட்டால் உலகம் நம்மை அறிய முடியாது.

கிரிக்கெட் மட்டையைக் தூக்கிக்கொண்டு ஆக்கி விளையாடச் செல்பவன் இரண்டிலும்  தேறாதவன். நிலத்தின் தன்மையறிந்து விதைக்காதவன் வாழத்தெரியாதவன்.

உண்மையை நாம் எப்பேது உணர்ந்து கொள்கிறோமோ அப்போதுதான் நாம் வாழ்வைத் தெரிந்து கொள்கிறோம். உண்மைக்கும் பொய்மைக்கும் வித்தியாசம் காணத் தெரியாமல் இருக்கும்வரை, வாழ்க்கை வெறும் மாயையாகவே தோன்றுகிறது.

ஷேக்ஸ்பியர் நாடகங்களை நடத்திக் கொண்டிருந்த காலம் அது. நாடகம் காண வரும் ரசிகர்களைப் பற்றிய ஒரு செய்தி அது. அதாவது ‘ரோமியோ அன்ட் ஜூலியட்’ , ‘ஹாம்லெட்’ , ‘மாக்பெத்’ ஆகிய நாடகங்களைப் பார்த்துவிட்டு சீமான்களும் சீமாட்டிகளும் கண்களைக் கசக்கிக் கொண்டு வெளியே வருவார்களாம். அரங்கத்திற்கு வெளியில் கடுங்குளிரில் நடுங்கியபடி அவர்களுக்காகக் காத்துக்கிடக்கும் சாரட் ஓட்டிகளைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படமாட்டார்களாம்.

இப்படித்தான் பலர் இருக்கிறார்கள். வால் போஸ்டர்களைப் பார்த்துக் கும்பிட்டு நிற்பார்கள். ‘கட்அவுட்’ களுக்கு அபிஷேகம் செய்வார்கள். ஆனால் அவர்கள் தங்களைப்பற்றித் துளியளவும் சிந்தனை இல்லாதவர்கள். தங்களை யாரென்று அறிந்து கொள்ளதவர்கள்.

தன்னைத்தானே எவன் அறிந்து கொள்கிறானோ, அவன் தனக்குள் உன்மையின்  ஒளியைக் காண்கிறான். அவனே வாழ்வில் வெற்றி பெறுகிறான்.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கு சிறுவயதிலேயே அபாரமான அறிவுக்கூர்மை, அற்புதமான நினைவாற்றல். அவரது தந்தை அவரை தமது மடிமீது அமர்த்திக்கொண்டு, தமது மன்னோர்களின் பெயர்களை எல்லாம் பட்டியலிடுவார்.

அவை அனைத்தும் மிக நீளமான பெயர்கள். எனினும், ராமகிருஷ்ணர் அவைகளை ஒருமுறை கேட்டதும் நன்றாக மனதில் பதிய வைத்துக்கொள்வார். தப்பேதும் இல்லாமல் அப்படியே திரும்பச் சொல்வார்.

தோத்திரப்பாடல்கள், ராமாயண, மகாபாரதக் கதைகள் என்று ராமகிருஷ்ணருக்கு அவரது தந்தை தினந்தோறும் கூறுவார். அவற்றை கேட்டபடியே கூறும் ஆற்றல் மிகச்சிறுவயதிலேயே ராமகிருஷ்ணரிடம் இருந்தது.

ஆனால் அவருக்கு கணிதமோ காத தூரம். அவரது தந்தை எவ்வளவு முயற்சித்தும் முடியவில்லை. ஆர்வமும் இயல்பான விருப்பமும் இல்லாததால், கணிதத்தை நினைவு வைத்துக்கொள்ள ராமகிருஷ்ணர் விரும்பவில்லை. நியாயம் தானே.

உங்கள் மனதிற்கு ஒவ்வாத ஒன்றை உங்கள் மீது திணிப்பதற்கு யாரையும் அனுமதிக்காதீர்கள். நிழலுக்கு ஒதுங்கியவன் விரும்புகிறான் என்பதற்காக புளியமரம் பப்பாளிப் பழங்களைத் தரமுடியாது.

உங்களுக்குள் ஓர் ‘உண்மை’ இருக்கிறது. அந்த ‘உண்மை’ தான் நீங்கள். அதை நீங்கள் உணர்ந்து கொண்டுவிட்டால், அதன்பின் குழப்பத்திற்கு வழியே இல்லை.

அறிவியல் பாடத்தில் வெறும் முப்பத்தைந்து மதிப்பெண்களை எடுத்தவன், மருத்துவக் கல்லூரியை நினைக்கூடாது. யாரும் அவனை நிர்பந்திக்கவும் கூடாது. ஏனெனில், அது ஆபத்தான விஷயம்.

அறிவியல் தான் வாழ்க்கை என்றில்லை. கலை, இலக்கியம், சட்டம், கணினி, தகவல் தொழில்ஙுட்பம் என எத்தனையோ துறைகள் உள்ளன. எந்தத்துறையில் சாதிக்க முடியுமோ, அந்ததுறையில் ஙுழைவதுதான் வெற்றிக்கு வழி.

சிலர் எதைஎதையோ நினைக்கிறார்கள். எப்படிஎப்படியோ கணக்குப்போடுகிறார்கள். தப்புத்தப்பாய் முடிக்கிறார்கள்.

அங்குமிங்கும் அலைவது முக்கியமல்ல. உங்கள் நிலை என்ன என்பது தான் முக்கியம். அதில் நீங்கள் தெளிவுடன் இருந்தால், வெற்றி உங்களுக்குள்  இருந்து துளிர்விடும்.

ரஷிய நாட்டு மனிதன் ஒருவன் விண்வெளியை அடைந்தான். அப்போது குருஸ்ரஷேவ், ‘என் நாட்டு மனிதன் சந்திரனை வட்டமிட்டுவிட்டான். அங்கு எந்த சொர்க்கத்தையும் அவன் காணவில்லை’ என்று வானொலியில் சொன்னார்.

உண்மைதான். மேலே எங்கும் சொர்க்கம் இல்லை. கிழே எங்கும் நரகம் இல்லை. அவை இருவேறு நிலைகள். உங்கள் மனத்தின் வழி வாழ்வின் நிலையே சொர்க்கம் அல்லது நரகம்.

எனவே உங்களுக்குச் சம்பந்தமில்லாதவைகளில் மூக்கை ஙுழைத்து, வாழ்வை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் உள்ளாற்றலை உணர்ந்து. அந்த ஆற்றலை வளப்படுத்திப் பாருங்கள். நீங்கள் பேசப்படுவீர்கள்.

வள்ளலார் ராமலிங்க சுவாமிகளுக்கு ஐந்து வயது நிரம்பியது. தமிழ் கற்க அவரைத் தன் குருவிடம் சேர்த்தார் அவரது சகோதரர். ஆனால் ராமலிங்கமோ கல்வி கற்கச் செல்வதாகச் சொல்லிவிட்டு கந்தசாமி கோவிலுக்குச்செல்ல ஆரம்பித்தார். அங்கு நீண்ட நேரம் மெய்மறந்து தியான நிலையில் நிற்பாராம்.

ஏட்டுக் கல்வியின் மீது அவருக்கு நாட்டம் ஏற்படவில்லை. ஆனால் மிக இளம் வயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார். தமது ஒன்பதாவது வயதில், ‘ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கன்ற உத்தமர் தம் உறவு வேண்டும்’ என்று அவர் எழுதிய பாடல் இன்றுவரை அனைவராலும் விரும்பிப்பாடப்பட்டு வருகிறது.

தன்னைத்தான் உணர்ந்து கொள்ளாதவன் தலைநிமிர்ந்து வாழமுடியாது. தன் ஆற்றலை தன் அடையாளமாக்கிக் கொண்டவனின் வளர்ச்சியை யாரும் தடுத்துவிட முடியாது. உனக்குள் ஓர் ‘உண்மை’ இருக்கிறது. அந்த ‘உண்மை’ தான் நீ.

நண்பனே,
நீ வீசி எறியப்பட்டாலும்.,
விழுந்த இடத்தில் இருந்து
விருட்சமாய் எழுந்துகாட்டு.

துவாரகை தரிசனம்

ஸ்ரீ கிருஷ்ணன் துவாரகையில் நூறு வருடங்கள் வாழ்ந்தார்.

அவர் துவாரகையில் இருந்தபோது எட்டு பேரைத் தமது பட்டத்தரசிகளாக ஏற்று மணந்து கொண்டார்.

ருக்மணி, சத்யபாமா, ஜாம்பவதி, நக்னஜீவி, சத்யா, பத்ரா, காலிந்தி, லஷ்மணா ஆகியவர்களே அவரது அந்தப் பட்டத்து ராணிகள்.

துவாரகையில் அவர் தமக்குப் பொன்னாலான ஓர் அரண்மனையை அமைத்துக் கொண்டே தோடு, தமது ராஜ்யத்தில் மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்.

ஒரு நூலுக்கு 999 புடைவைகள் வீதம் வழங்கி திரௌபதியின் மானத்தைக் காப்பாற்றியதும் ஸ்ரீ கிருஷ்ணன் துவாரகையில் இருந்த போதுதான் நடைப்பெற்றது.

துவாரகையில் இருக்கும்போதுதான் அவர் சுதாமா என்ற குசேலரின் வறுமைப் பிணியையும் நீக்கினார்.

குசேலருடைய ஊர் போர்பந்தர் – மகாத்தமா காந்தி பிறந்த ஊர்.

போர்பந்தருக்கு  சுதாமாபுரி என்ற பெயரும் உண்டு.

கடைசியாக அவர் குருஷேத்திரப் போரில் அர்ஜூனனுக்கு கீதையை அருளினார்.

துவாரகை ராஜ்யத்தில் யாருக்கு என்ன துயர் ஏற்பட்டாலும் ஸ்ரீ கிருஷ்ணர் விரைந்து சென்று துன்பம் களைத்து. மக்கள் போற்றி வணங்கும் மன்னனாகச் செயல்பட்டார்  என்பதற்கு ஆதாரமாகப் பல கதைகள் சொல்கிறார்கள்.

ஸ்தூலமாக அவர் உலகில் வாழ்ந்தபோது செய்ததைக் காட்டிலும், மறைந்த பிறகும் தம்மை வழிபடும் பக்தர்களுக்கு அவர் அருள் புரிந்து வருவதை மகான்களும், பக்கதர்களும் புனித நினைவுகளாகப் போற்றி வருகிறார்கள்.

பாரதப் போர் முடிந்த பிறகு, தூர்வாசரின் சாபத்திற்கிணங்க யாதவ வம்சத்தின் அழிவுக்கும் அவரே வழி வகுத்தார். பதவியும், பணமும், ஆதிக்கமும் போதையேற்ற யாதவர்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டு மாண்டொழிந்தனர்.

கொளரவர்களைப் பறி கொடுத்த காந்தாரியின் சாபத்தின்படி தானும் மரணம் ஏற்கத் துணிந்தார்.

இந்தச் செய்திகளெல்லாம் அவர் சமுதாய நலனை எவ்விதம் பாதுகாத்தார், சமுதாயப் போக்கைக் கணிப்பதில் எவ்வளவு வல்லவராக விளங்கினார் என்பதைத் தெளிவாக விளக்குகின்றன. அந்த உத்தமருடைய ஒவ்வொரு செயலையும் ஆழ்ந்து அனுபவித்து ஆராயும்போது நாம் இந்த முடிவுக்குதான் வர முடியும்.

அநார்த்தம் என்ற மாநிலத்தில் துவாரகா இருந்ததாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

இந்த அநார்த்தம்தான் பின்னால் சொளராஷ்டிரம் என்று பெயர் பெற்றது.

ஹரி வம்சம் துவாரகாவைப் பற்றி ஏராளமான விவரங்களை நமக்கு தருகிறது.

முதுராவிலிருந்து அநார்த்தம் வந்து சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணன் கருடனிடம் தாம் தங்குவதற்கு ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்துத் தரும்படி கேட்டார்.

தன் சிறகுகளை அகல விரித்துப் பறந்த கருடன் கடைசியில் குசஸ்தலி என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்தார். கண்ணனும் கருடனின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டார்.

ஆனால் குசஸ்தலி அளவில் சிறிய பரப்பாக இருந்தது. ஆனால் ஸ்ரீ கிருஷ்ணன் சமுத்திர ராஜனை வேண்ட, அவனும் கடலை ஒதுக்கி மேலும் 12 யோஜனை (ஒரு யோஜனை ஓன்பது மைல்) நிலப்பரப்பை அளித்தார்.

கண்ணன் தனக்குக் கிடைத்த நிலப்பரப்பில் துவாரகையை நிர்மாணித்தார். அதில் நான்கு யோஜனை தூரத்தில் தமது அரண்மனையை அமைத்துக் கொண்டார்.

ஊரையும் அரண்மனையையும் அவர் மிகவும் திட்டமிட்டு நிறுவியதாகச் சொல்லப்படுகிறது.

ஹரிவம்சத்தின்படி துவாரகாவுக்கு கிழக்கிலும் வடக்கிலும் கடல் இருந்ததாம். மேற்கே கடலுடன் இணைந்த சிற்றூரும், தெற்கே ரைவதக் என்ற குன்றும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கிட்டதட்ட துவாரகா ஒரு தீவில் இருந்தது என்றே சொல்லக் கூடும்.

ஸ்ரீமத் பாகவதம், 12 யோஜனை சுற்றளவுள்ள ஒரு கோட்டை கட்டப்பட்டதாகவும் அதில் துவாரகா இருந்ததாகவும் அறிவிக்கிறது.

இந்த கோட்டை குறிப்பாக எங்கே இருந்தது என்ற விவரம் பாகவதத்தில் இல்லை.

கிருஷ்ணன் அகழி சூழ்ந்த கோட்டை ஒன்றை கட்டினார் என்றும், அகழிக்கு மேல் ஆங்காங்கே பாலங்கள்  கட்டுவித்தார்  என்றும் கதைகளுண்டு.

கண்ணன் துவாரகாவைச் செழிப்பானதாக ஆக்குவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.

கிருஷ்ணன் காலத்திலேயே சிசுபாலன் துவாரகாவுக்குத் தீ வைத்ததாகவும், பின்னால்  அவன் நண்பன் சால்வன் துவாரகாவைத் தாக்கியதாகவும் தெரிகிறது. அப்பொழுதெல்லாம் கண்ணன் துவாரகாவில் இல்லை: வெளியூர் சென்றிருந்தார். அவருடைய புத்திரர்கள் தலைமையில் யாதவர்கள், சால்வனைத் துரத்தியடித்து துவாரகாவைக் காத்தனர்.

கிருஷ்ணன் துவாரகா திரும்பியதும் விஷயத்தைக் கேள்வியுற்று சால்வனோடு போர் தொடுத்து அவனைக் கொன்றார் என்கிறது மகாபாரதம்.

இதேபோல் பௌண்டிரன் என்ற அரசனும் துவாரகாவைத் தாக்கியதாக ஹரி வம்சம் தெரிவிக்கிறது.

எல்லாமே ஒரு காலத்தில் அழிய வேண்டியது தானே? உன்னத நிலையைப் பெற்றிருந்த துவாரகாவும் கிருஷ்ணன் சமாதியானவுடன் கடல் கொள்ள அழிந்து போயிற்று.

பாரதப்போரில் புத்திரர்களை இழந்த காந்தாரி மாளத் துயர்த்தில் ஆழ்ந்தாள். அவளுக்கு ஆறுதல்  சொல்லும்படி எல்லோரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க கண்ணன் காந்தாரியிடம் சென்றார்.

கண்ணனைப் பார்த்ததும் காந்தாரி கோபம் கொண்டு சபித்தாள்.-

“நீ தான் மாகாபாரதப் போருக்குக் காரணம், பொறுப்பு. ஆதலால் உன்னை நான் சபிக்கிறேன்: நீ உன் உற்றார் உறவினர்கள் அழிந்து போவதற்குக் காரணமாக ஆவாய். இன்னும் முப்பத்தாறு வருடங்களில் உன் வம்சமே இருக்காது. இழிந்த மரணம் எய்துவாய். இன்று கொளரவர் குலப்பெண்கள் அழுவது போல் யாதவப் பெண்கள் அன்று அழுது அழுது அழிவார்கள்!”

ஸ்ரீ கிருஷ்ணனைத் தவிர வேறு எவராக இருந்தாலும் காந்தாரி இப்படி ஒரு சாபம் கொடுத்ததற்கு என்ன பதில் சொல்லியிருப்பார்கள், சற்று நினைத்துப் பாருங்கள்! கிருஷ்ணன் யோகேசுவரனாயிற்றே – புன்முறுவல் பூத்தார்! காந்தாரிக்கு நன்றி கூறினார்.

“தாங்கள்  என் காரியத்தை மிகவும் சுலபமாக்கிவிட்டீர்கள்.  யாதவர்கள் விபத்துக்குள்ளாகி அழிவார்கள் என்பது நான் அறிந்ததுதான். என்னைத் தவிர வேறு எவரும் அவர்களை அழிக்க முடியாது. அவர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு சாவார்கள். இது விதி!” என்றார் ஸ்ரீ கிருஷ்ணன்.

தானும் தன் சுற்றமும் அழியப் போவதை எதிர்பார்த்து அதை ஏற்றுக்கொள்ளும் அசாதாரணமான மனநிலை, நிதானம் – அதுவும் அப்படியாவது நடப்பதாவது என்று அடித்துச் சொல்லக் கூடிய ஒரு காலக்கட்டத்தில் – அழிவை வரவேற்கும் துணிச்சல் யோகேசுவரனாகிய ஸ்ரீ கிருஷ்ணனைத் தவிர வேறு எவருக்கு இருக்க முடியும்?

சரியாக முப்பத்தாறு ஆண்டுகள் கழிந்தன. பாரதப் போரைப் பற்றி விவாதம் ஒன்று கிளம்பியது. அதில் சாத்யகிக்கும் கிருதவர்மாவுக்கும் அடிதடியாக, யாதவர்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அதன் விளைவாக முடிவில் எல்லோருமே மாண்டார்கள். சாத்யகி பாண்டவர் சார்பாகவும், கிருதவர்மா கௌரவர் சார்பாகவும் பாரதப் போரில் ஈடுபட்டிருந்தனர் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

யாதவர்களின் முடவை அமைதியான சித்தத்தோடு அதுவரை பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ கிருஷ்ணன் தன் மகன் பிரத்யும்னன், சாத்யகி ஆகியவர்களின் பினங்களைப் பார்த்ததும் ஆத்திரமடைந்தார். கை முஷ்டியாலேயே அநேக யாதவர்களைக் கொண்றார். இந்த யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணனுடைய எல்லாப் பிள்ளைகளுமே மாண்டுவிட்டனர். கடைசியில் எஞ்சியிருந்த இரண்டு யாதவர்கள் அவரது கோபத்தை பிரார்த்தனையால் தனியச் செய்தார்கள்.

இங்கே ஒரு முக்கியமான தகவல்: இந்த கலகம் எதனால் ஏற்பட்டது? ஏதேனும் கருத்து வேற்றுமையா காரணம்? இல்லை, இல்லை, குடித்தான் காரணம். கண்ணன் தடுத்திருந்தும் யாதவர்கள் அவன் பேச்சைக் கேளாமல் போதைப் பொருளுக்கு அடிமையானார்கள். இன்னும் இது எவ்வளவு பொருந்துகிறது! பணம், பதவி, பலம், போதை – அழிவுக்கு வேறு என்ன வேண்டும்?

சோமநாதர் கோயிலைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். கஜினி முகம்மதுவால் தாக்கப்பட்ட கோவில். அந்தக் கோயில் இருக்கும் சோமநாத் என்ற ஊர் பிரபாஸ் (பிரபாஸம்) என்ற மண்டலத்தில் (நிலப் பகுதியில்) உள்ளது. யாதவர்கள் கண்ணன் சொற்படி இந்தப் பிரபாஸ் பகுதிக்குச் சென்றார்கள். அப்படிச் செல்லும் போதுதான் கண்ணன் அவர்களை மதுவுக்கு அடிமையாகாமல் இருக்கும்படி எச்சரித்தார். யாதவர்கள் அவர் சொல் கேட்காததால் பிரபாஸ் ஷேத்திரத்தில் கூண்டோடு மாண்டனர்.

இந்தப் பிரபாஸ் துவாரகையின் ஆட்சிக்குட் பட்டிருந்தது. இன்று பல புண்ணியத் தலங்கள் நிறைந்து புராணப் பெருமை பெற்ற நிலப்பகுதியாக விளங்குகிறது.

ஸ்கந்த புராணத்தில் ‘பிரபாஸ் காண்டம்’ என்று ஒரு காண்டமே இருக்கிறது.

இப்பொழுது இந்தப் பிரதேசத்தை ‘ப்ரபாஸ் பாடன்’ என்கிறார்கள். பாடனுக்கும் நம்முடைய பட்டணத்துக்கும் எவ்வளவு ஒலி ஒற்றுமை, பார்த்தீர்களா?

யாதவர் மாண்ட நிலையில் கண்ணனின் மனம் வெறிச்சோடியது. காடுகளில் திரிந்து தன் அண்ணன் பலராமனை அடைந்தார். பலராமன் அப்போது லௌகிகத்தை வெறுத்து காட்டில் தனியாக வாழ்ந்து வந்தார்.

யாதவர் அயிந்த செய்தியை கண்ணன் வாயிலாகக் கேட்டு துயர்ததுக்குள்ளாகி அவர் அப்படியே உயிர் விட்டு விட்டார்.

கண்ணன் என்ன நிலையில் இருந்திருப்பார் – என்று சற்று யோசியுங்கள்!

அவர் ஒரு மரத்தினடியில் அமர்ந்திருந்தார். அப்பொழுது ஜரன் என்ற வேடன் தவறுதலாக மான் என்று நினைத்து அம்பு எய்ய. கண்ணன் தன் உன்னத வாழ்நாளை முடித்துக் கொண்டு சமாதியானார்.

மகாபாரதம், விஷ்னு புராணம், ஹரிவம்சம், பாகவதம், தேவி பாகவதம் ஆகியவை கண்ணனுடைய முடிவை வர்ணிக்கின்றன. ஆயினும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட சில விவரங்களைத் தருகின்றன. எது எப்படியாயினும்,

“இதோ, இவன் ஒரு முழு மனிதனாக வாழ்ந்தான் என்று இயற்கை எழுந்து மார் தட்டிச் சொல்லும் அளவுக்கு மூல தத்துவங்கள் சரியாக அவனிடம் கலந்து பிரகாசித்தன அல்லவா?”

“ஹரி மந்தர் என்னும் கண்ணன் கோயில் ஒன்றைத் தவிர, கண்ணன் காலமானதும் துவாரகாவைக் கடல் கொண்டது” 

இந்த சோக முடிவு நம்முடைய புராணங்களில் மட்டுமின்றி ஜைன பௌத்த நூல்களிலும் காணக் கிடைக்கிறது.

ஸ்ரீராமபிரானின் கருணை


வாலிக்கு ராமன் கருணை காட்டினான் என்ற தத்துவத்தை ஏற்றுக்கொண்டால். சூர்ப்பணகைக்கும் அவன் கருணை காட்டினான் என்ற தத்துவத்தை உய்த்து உணரத்தான் வேண்டும்.

சூர்ப்பணகை காட்டில் திரிந்துகொண்டிருந்த அரக்கி; ராவணனின் தங்கை. இவளுக்குப் பகவானின் அருள் கிடைத்தது கிடைத்தற்கரிய பெரும் பேறுதான்.

இவள் கானகத்தில் வேறு மார்க்கமாகப் போயிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் ராமன் இருந்த இடத்தின் வழியாக வந்து ராமனின் தரிசன பாக்கியம் பெற்றது அவளது புண்ணியம்தான்.

ரமிக்கச் செய்பவன் ராமன். பார்த்த மாத்திரத்திலே அனைவரையும் கவர்ந்திழுக்கும் பேரழகு படைத்தவன். “தோள் கண்டார் தோளே கண்டார்” என்பதற் கிணங்க அவனுடைய ஒவ்வொரு வடிவழகும் முழுவதும் காண, கண்டு முடியாத மோகனரூப சௌந்தர்யம். அவனது அசாதாரண வடிவழகில் ஈபட்டுச் சூர்ப்பணகை சொக்கிப் போகிறாள்.

ஓரே குடியில் பிறந்த ராவணன், விபீஷணன், சூர்ப்பணகை மூன்றுபேரும் ராமனிடம் ஈடுபட்டவர்கள்தாம்.

ராவணன் ராமனின் வீரப்பிரதாபத்தில் வீழ்ந்தான்.

விபீஷணன் அண்ணலின் கருணாவிலாசத்தில் ஆழ்ந்தான்.

சூர்ப்பணகை சீதாராமனின் ஜகன்மோகன திவ்ய சௌந்தர்யத்தில் வசியமாகி அவஸ்தைப்பட்டாள்.

அஞ்சொல்இள மஞ்ஞைஎன,
அன்னமென மின்னும்
வஞ்சிஎன, நஞ்சமென,
வஞ்சமகள் வந்தாள்.

சூர்ப்பணகை இவ்வாறு வஞ்சமகள் வடிவம் தாங்கிய நஞ்சு போலவும், மானின் விழி படைத்த மயில் போலவும் ராமன்முன் வந்து நின்றாள்.

அவள் அறியாமையைக் கண்டு அவன் மனம் இரங்கினான். அவளிடம் அவன் அழகாக உரையாடியிருக்கிறான். அவளிடம் அவன் மனம்விட்டுப் பேசியது போல வேறு எவரிடமும் பேசியதில்லை என்றே சொல்ல வேண்டும்.

ராமன் தன் சரிதத்தை உள்ளது உள்ள படியே அவளிடம் தெரிவித்திருக்கிறான்.

இப்படி அவன் தன் சரிதையைத் தன் வாய்மொழியாகச் சொல்லியிருப்பது இந்த ஓர் இடத்தில் தான்.

அத்தகைய பாக்கியம் பெற்றவள் சூர்ப்பணகை. இவ்வளவு பாக்கியம் வாய்த்திருந்தும் அது வீணாகிவிட்டது.

காரணம், அவள் ராமனைப் புரிந்துகொள்ளவில்லை. யாரைத் துணையாகக் கொண்டு ராமனைப் பற்ற வேண்டுமோ அந்தச் சீதாதேவியையே பொறாமையால் விழுங்கிவிடத் துணிந்தாள் சூர்பணகை.

சீதாபிராட்டியின் அருள் பெற்ற விபீஷணன் ராமனை அடைந்து உய்ந்து போனான். இவள் பங்கப்பட்டுப் போனாள். ராமனைக் கிட்டச் சீதாதேவியின் கருணை விலாசம் வேண்டும். ராமபிரான் கருணை கிடைத்தும் பயன்படுத்தாமல் பிழைபட்டுப் போனாள் சூர்ப்பணகை.

“இரக்கம் என்றெரு பொருளில்லாதவர் அரக்கர் என்று உளர் அறத்தின் நீங்கினார்” என்று அரக்கர்களை அறிமுகப்படுத்துகிறார் கம்பர்.
அரக்கர்கள் கருணையே இல்லாதவர்கள். ராமபிரானே கருணையே வடிவானவன்.

கருணையே இல்லாதவர்களிடத்தில் கருணை காட்டுவதுதானே கருணாமூர்த்திக்கு அடையாளம்?

இம்மாதிரி அசாதாரணமான கருணை காட்டுவதனால்தான் காகுத்தன் கருணை என்று சிறப்பித்துச் சொல்கிறோம். விபீஷணனுக்கு அடைக்கலம் கொடுத்தது கருணா விலாசத்தின் உச்சக் கட்டம்.

இந்த அபயப்பிரதானக் கட்டத்தில் சரணாகதியைப்பற்றிய அநேக முக்கியமான தத்துவங்கள் வெளிப்படுகின்றன.

ராமன் இருக்கும் இடத்தையே அயோத்தியாகப் பாவித்து சீதாபிராட்டியின் திருநோக்கு. சீதை ராமனுடன் இணைப்பிரியாமல் இருப்பது அவள் தர்மம்.

அவளை ராமனிடமிருந்து பிரித்துச் சிறை எடுத்துச் செல்கிறான் ராவணன். அது தகாத செயல் என்று தர்மோபதேசம் செய்கிறான் விபீஷணன். அவன் தர்மாத்மா. “பகவான் உடைமையை அவனிடம் ஒப்படைத்துவிடு; இல்லையேல் நீ மட்டுமன்று, அரக்கர் குலமே அழிந்துவிடும்” என்று தர்மத்திற்காக வாதாடுகிறான்.

“நம்முடைய புகழ், செல்வம், சுற்றம் முதலியவை நிலைத்திருக்க வேண்டுமானால் சீதையை விட்டுவிட வேண்டும். அவ்வாறு விட்டுவிட்டால் அதைப் போல வெற்றி நமக்கு வேறெதுவும் இல்லை” என்று ராவணனிடம் எடுத்துரைக்கிறான் விபீஷணன்.

விபீஷணன் எவ்வளவோ மன்றாடியும் ராவணன் திருந்தவில்லை; மாறாகக் கடும் சினம் கொள்கிறான். தம்பிமனம் நோக இழித்தும் பழித்தும் பேசுகிறான்.

மூர்க்கர்களுக்கு உபதேசம் பண்ணினால் அது பலிக்காது என்பதை விபீஷணன் அறிவான். இருந்தாலும் அவர்களுக்குக் கூடியவரை நன்மை செய்வதுதான் தர்மம் என்பதனால் உடன்பிறந்த சகோதரனை உரிமையுடன் திருத்தப் பெருமுயற்சி செய்தான்.

அதற்குப் பயன் ஏற்படவில்லை. ராவணனுடைய கொடிய வார்த்தைகளைக் கேட்டவுடன். தன் கையிலிருந்த கதையுடனும், தன் மந்திரிகள் நால்வருடனும் இலங்கையை விட்டு கிளம்புகிறான்.

அப்போது ராவணனின் ஆதரவில் தனக்குக் கிடைத்திருந்த மாளிகை, செல்வம் பெண்டு பிள்ளைகள் மற்றும் விட வேண்டிய அனைத்தையும் துறந்து, ககனமார்க்கமாகப் புறப்பட்டுவிட்டான்.

உற்றார் உறவினர்களையும் உரிமைச் செல்வங்களையும் விடுத்து அந்தரத்திலே நிற்கும் விபீஷணன் ‘ஸ்ரீமான்’ என்று போற்றுகிறார் வால்மீகி.

உலகத்தில் மிகுந்த செல்வம் படைத்தவனையே “ஸ்ரீமான்” என்று போற்றுவது வழக்கம. செல்வங்களைத் துறந்த விபீஷணன் ‘ஸ்ரீமான்’ என்கிறார் வால்மீகி. விடவேண்டியவற்றை விட்டவுடனே நிலையான சம்பத்து அதாவது தெய்விகம் வந்தடைகிறது.

அந்த நிலையான சம்பத்துத்தான் ஸ்ரீராகவனின் கருணை அதனால்தான் வால்மீகி அந்தப் பேரருளாளனை (போரருளுக்கு ஆட்பட்டவனை) ஸ்ரீமான் என்று போற்றிப் பாராட்டுகிறார்.

இலங்கை மண்ணை உதறிவிட்டு மேலே இருந்தவாறே மறுபடி ராவணனுக்கு உபதேசம் செய்கிறான் விபீஷணன்.

‘ஐயோ! அநியாயமாய் அடியோடு அண்ணன் அழிந்து போகிறானே! என்ற கருணையினால் அவ்விதம் செய்கிறான்.
நெருப்பினால் வெந்துபோன வீட்டில் ஏதேனும் ஒரு குச்சியாவது அகப்படாதா என்று துருவிப் பார்ப்பது போலே, ‘காமத்தீயால் கருகிப்போன ராவணன் நெஞ்சில் சிறிதளவாவது ஈரம் இருக்கிறதா? என்று ஆராய கருணையினால் மீண்டும் உபதேசம் செய்கிறான் விபீஷணன்.

செய்ய வேண்டிய முயற்சியைச் செய்யாமலிருப்பது அதர்மமாகும். அதனால்தான் கடைசிவரை முயற்சி செய்து பார்க்கிறான் விபீஷணன்.

அது பலிக்காமற் போகவே அனைத்தையும் துறந்துவிட்டு ராமனிடம் அடைக்கலம் புகச் செல்கிறான்.

‘தர்மத்திற்காக எதனையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் தர்மத்தைத் துறக்கலாகாது’ – இந்த உண்மையை அறிந்தவர்கள் விபீஷணனின் தர்மச் செயலைப் போற்றுவார்கள்; புரியாதவர்கள் தூற்றுவார்கள்.

விபீஷணன் ககன மார்க்கமாக வந்து கொண்டிருந்தபோது சுக்கிரீவன் முதலான வானரவீரர்கள் அவனைப் பார்த்துவிடுகிறார்கள். பிரதிகூலர் தொடர்பு விட்டவுடன் அனுகூலர்கடாட்சம் கிட்டிவிடுகிறது. பதிதர்களை விட்டு நீங்கியவுடனே பரம் பாகவத கடாட்சம் கிடைக்கப் பெறுகிறது.

தமபி சொல்லை மதியாத ராவணனை விட்டு, தம்பி சொல்லை மதிக்கும் ராமனை நாடி வருகிறான் விபீஷணன்.

“எல்லைஇல்  பெருங்குணத்த இராமன் தாள்இணை புல்லுதும், புல்லி, இப்பிறவி போக்குதும்” என்று கருதிய வண்ணம் காகுத்தனிடம் சரணாகதியடைய வருகிறான்.

ராவணன் தன்னைப் புண்படப் பேசியதும், சிறுவனாகிய இந்திரஜித்தைக் கொண்டு அவமானப்படச் செய்ததும் விபீஷணன் மனதை விட்டு அகலவில்லை. எனவே உறவுகளை எல்லாம் விட்டொழித்து ஸ்ரீராமன் தான் உண்மையான உறவு; அவன் தாங்களையே சரணமாகப் பற்றுகிறேன் என்கிறான்.

ஸோ ஹம் பருஷிதஸ் தேந
          தாஸவச்சாவமாநித: I
த்யாக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச
           ராகவம் சரணம் கத: II

“பற்றுக பற்றற்றான் பற்றினை
                      அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”

என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க, பற்றுகளை விட்டால் இறைவனைப் பற்றலாம். இறைவனைப் பற்றினால் பற்றுகளை விடலாமல்லவா?

விபீஷணன் பற்றுகளை விட்டுப் பகவானைப் பற்ற வருகிறான்.

திரௌபதி பற்றுகளை விடும்வரை பரந்தாமன் அருள் செய்யவில்லைய எல்லாப் பற்றுக்களையும் விட்டுவிட்டுக் கண்ணனைச் சரண் புகுந்தாள். ‘கோவிந்தா!’ என்று கதறிக் கைகளைத் தலைக்கு மேல் தூக்கிக் கும்பிட்டாள். திக்கற்ற நிலையிலே அவளுக்கு வேறோர் சொல்லும் சொல்லத் தோன்றவில்லை.

கண்ணீர் ஆறாகப் பெருகிச் சோர, துகில் பற்றியிருந்த கைகள் சோர, மெய் சோர, கோவிந்தா! கோவிந்தா! என்று வாய்விட்டு அலறினாள்.

ஆரா அமுதனின் திருநாமத்தை உச்சரித்த அளவிலே, அவள் நாவில் ஆரா அமுதம் ஊறியது. மெய் புளகாங்கிதமடைந்து உள்ளமெல்லாம் உருகிக் கரைந்தது.

இப்படி உருகிக் கரைந்த நிலையிலும் அணித்தே இருந்த துவாரகையிலிருந்து கண்ணன் நேரில் வந்து அருள் செய்யவில்லை.

அவன் திருநாமமாகிய கோவிந்தநாம சங்கீர்த்தனமே அவளுக்கு அபயமளித்து அவள் மானத்தைக் காத்தது.

கண்ணன் திருநாமம் துகில் வளர்க்கும் சித்துவேலை செய்தது.

இது போலவே இறகிழந்த சம்பாதிமுன், ராமநாமத்தைப் பஜித்த அளவிலே இறகுகள் வானளாவி வளர்ந்தனவாம்.

திரௌபதி கோவிந்தன் நாமத்தை உச்சரித்தாள். அவள் துகில் வளர்ந்து கொண்டே போயிற்று. சம்பாதி ராமன் நாமத்தை உச்சரிக்கவில்லை. சுற்றி நின்ற வானரர்கள்தாம் உச்சரித்தனர் சம்பாதிக்காக; பிறர் பஜித்த அளவிலே ராமநாமம் அவனுக்கு அருள் சுரந்தது.

கண்ணன் பரத்துவநிலையில் அதாவது தெய்வநிலையில் நின்று பக்தர்களைச் சோதித்துக் காப்பான்.

ராமனோ அவதாரநிலையில் அதாவது மனிதநிலையில் பக்தர்களைக் தேடிவந்து தானகவே கருணைபாலித்துக் காப்பான்.

காகுத்தன் கருணையைப் பெறுவதற்கு, சர்வசங்க பரித்தியாகம் அதாவது சகலத்தையும் துறப்பது வேண்டியதில்லை. அவன் எளியார்க்கு இன்னருள் புரியும் எளியவனான சௌலப்யசீலன்.

ஒரு முறை ராமா என்று அவன் திருநாமத்தைச் சொன்னால் போதும் உடனடியாக வந்து பேரருள் புரிவான்.

ஸ்கருதேவ ப்ரபந்நாய தவாஸ்மதி
                      ச யாசதே I
அபயம் ஸர்வபூதேப்யோ ததாமி
                  ஏதத் வ்ரதம் மம II

ஒருவன் தன் தகுதியின்மையைச் சிந்திக்காமல் என்னை ஒரு முறை சரணம் பற்றினால் போதும்; அவனைச் சகல பூதங்களிடமிருந்தும் ரட்சிப் பேன். இது என் இலட்சியம் என்கிறான் ராகவன்.

என்னை வந்தடைந்து, ‘ஹே ராமா! இந்த ஆத்மா உன்னுடையது’ என்று ஒரு முறை சொன்னபோதிலும் அவனுக்கு அபயம் அளிப்பேன். அவன் எதற்கும் அஞ்ச வேண்டுவதில்லை. இது என் உறுதியான கொள்கை என்கிறான் ராமன்.

மற்ற எந்தக் கொள்கை மாறினாலும் இந்தக் கொள்கை மட்டும் மாறாது.

என்னைச் சரணம் பற்றிய சரணாகதன் என்னை விட்டு விலகப் பார்த்தாலும் நான் அவனை விடாமல் பற்றிக் கொள்வேன் என்கிறது இந்த ராம சரமசுலோகம். ஸர்வதர்மாந் பரித்யஜ்ய என்ற கீதா சரமசுலோகம் போன்று புகழ்ப் பெறுவது இந்த ஸ்ரீராமாயண சரமசுலோகம்.

இதன் மூலம் சரண்யன் சரணாகதனை நான் விடேன் என்ற உறுதிப்பாட்டை வெளியிடுகிறேன்.


திங்கள், 22 ஏப்ரல், 2013

வேடனின் ஆன்மிக வாழ்க்கை

இமாசலம்

வானாறும் தேனாறும் பாய விண்ணளவு வீறு கொண்டு ஓங்கி நிற்கின்றுது இமாசலம், அங்கே சித்தர்களும் முத்தர்களும் கட்டை போல அசைவற்று அரிய பெரிய தவம் செய்கிறார்கள். பலப் பல வகையான நிறங்களும் நறுமணங்களும் உடைய மலர்களைப் பூத்து அணியணியாக மரங்கள் நிற்கின்றன. கொடிய விலங்குகள் இரவு பகலாக இரை தேடி உலாவுகின்றன. சிங்கமும் யானையும் போர் புரிகின்றன. காண்டாமிருகங்கள் கர்ஜிக்கின்றன. மயில்கள் அசைகின்றன; குயில்கள் கூவுகின்றன; பஞ்சவர்ணக் கிளிகள் கொஞ்சுகின்றன. கற்புடைய மாந்தர்களை போல் பூங்ககொடிகள் நெளிந்து நிற்கின்றன. இலைகளும் பூக்களும் உதிர்ந்து தரை மெத்தென்று காட்சி தருகின்றது.

ஆகுகன்

இத்தகைய மாட்சியுடன் காட்சி தருகின்ற பணிமலையில் ஆகுகன் என்ற வேடர் தலைவன் வாழ்ந்து வந்தான். ஆகுகன் தோள்வலிமையும், வாள்வலிமையும் மிகுந்தவன். இருண்டு சுருண்ட தலைமயிரும், முறுக்கிய மீசையும், தருக்கிய சிந்தையும், பொருப்பன்ன தோளும், செருப்பணிந்த காலும் படைத்தவன்.

அவனுடைய பார்வையில் வீரமும், உள்ளத்தில் ஈரமும் தவழ்ந்தன; தேனும் ஊனும் உண்டு பருத்த உடம்பும், கறுத்த நிறமும் கொண்டு, எப்போதும் வில்லேந்தியவனாய் உலாவுவான்.

அவன் வேட்டையாடும்போது, மக்களுக்குத் தீங்குபுரிகின்ற விலங்குகளையே கொல்லுவான். விலங்குக்குட்டிகளையும், வயது முதிர்ந்த விலங்குகளையும், சாதுவான விலங்குகளையும் கொல்லமாட்டான். அவ்வழி வந்த சாதுக்ககளுக்குத் தேனும் தினைமாவும் தந்து உபசரித்து வழியனுப்புவான்.

ஆகுகி

இந்த வேடவேந்தனுடைய மனைவி ஆகுகி. இவள் கணவனுடைய கருத்தறிந்து ஏவல் செய்வாள். கணவனுடைய சொல்லை வேதவாக்காகச் சிரமேற்கொண்டு நடப்பாள். கணவன் வேட்டையாடிக் கொண்டுவந்து தருகின்ற ஊன்களைப் பக்குவம் செய்து, தேன் கலந்து சுவையூட்டிக் கணவனுக்குக் காலம் தவறாது தருவாள். பாவச் செயல்களுக்குக் கூசுவாள். பாலமுதம்போல் இனிமையாகப் பேசுவாள். பிறர் துன்பம் களையும் கருணையுள்ளம் படைத்தவள்.

ஆகுகனும் ஆகுகியும் ஒருவர்மீது ஒருவர் பற்று வைத்து ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். இருவரே தங்கக்கூடிய குகையில் அவர்கள் வாழ்வு நீண்ட காலமாக அமைந்திருந்தது. நல்ல மனைவி நமக்குக் கிடைத்தாளே என்று கருதி ஆகுகன் ஆனந்த மடைவான். உத்தமனான கணவனை நாம் பெற்றோம் என்று எண்ணி எண்ணிப் பெருமிதம் அடைவாள் ஆகுகி. சில வேடர்கள் இவர்களின் ஒற்றுமையைக் கண்டு பொறாமைப் பட்டார்கள்.

சாது முனிவரின் சந்திப்பு


காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாற்சர்யம் என்ற ஆறு பகைவரையும் வென்றவரும். அஞ்செழுத்தை நெஞ்சழுத்தியவரும், அருமறையில் வல்லவரும், திரு நெறியில் நின்றவரும், திருநீறு பூசிய நெற்றியும், கண்டிகை தவழும் திருமார்பும் தாழ்ந்த சடைக்கற்றையும், யோகதண்டம் ஏந்திய கரமும், கருணை பொழிகின்ற கண்களும் உடைய ஒரு சாது முனிவர் ஒருநாள் மாலைவேளையில் அங்கு வந்தார்.


அருந்தவ முனிவரைக் கண்ட ஆகுகன் அன்புடன் பணிந்தான்.

‘தபோதனரே! தங்கள் வரவு நல்வரவு. தங்களைக் கண்ட கண்கள் நல்ல கண்கள். கொடிய விலங்குகள் உலாவுகின்ற கொடிய கானகம் இது. நஞ்சுடைய நாகங்கள் நிறைந்த வனம். பல கல் சுற்றளவுள்ள இந்த மலைக்காட்டுக்கு நீர் வந்துவிட்டீர். இப்போது மாலை நேரம். இரவிலேதான் விலங்குகள் இரைதேடி மிகுதியாக உலாவும். காட்டைக் கடந்து போகுமாறு உம்மை விடுவதற்குப் போதிய நேரம் இல்லை. பெரிய துன்பம் நிறைந்த இந்தக் காட்டுக்கு ஏன் வந்தீர்? தங்களுடைய நற்காலத்தால் நான் தங்களைச் சந்தித்தேன். அடியேன் குடியிருக்கும் குகைக்குச் சீக்கிரமாக வாருங்கள். இன்றிரவு அங்கே தங்கி நாளைக் காலை புறப்பட்டுப் போகலாம்” என்று அவருக்கு இன்னுரை கூறி, முனிவரைத் தன் குகைக்கு அழைத்துச் சென்றான். ஒடுக்கமாக உள்ள குகைக்குள் மான் தோலை விரித்து முனீந்திரரை நிருத்தி ஆகுகனும் ஆகுகியும் பல முறை பணிந்தார்கள். அவருக்கு பலாச் சுளைகளைத் தேனில் கலந்து உண்பித்தார்கள். தேன் கலந்த தீஞ்சுவைத் தண்ணீர் தந்து. இன்முகம் காட்டிக் கனியமுதமன்ன இனிய மொழிகள் கூறி உபசரித்தார்கள்.

முனிவர் பெருமான் அவர்களின் அன்பைக் கண்டு அகமிக மகிழ்ந்தார்; ஆசி கூறினார். ‘வெட்டு, குத்து, அடி, உதை, கொல்லு என்று கர்ஜனை புரிகின்ற கொடுங்குணம் படைத்த வேடர்குலத்திற் பிறந்த இவர்கள். நம்மிடம் தாயினும் சாலப் பரிந்து அன்பு செய்கிறார்களே! இது பேராச்சிரியம். ஆ! என்ன அன்பு! எத்தனை பண்பு! முன்பின் அறியாத என்னிடம் பல காலம் பழகியவரைப் போல் அன்பு செய்கின்றார்கள். இவனுடைய குலத்துக்கும் குணநலத்துக்கும் சம்பந்தமே இல்லை’ என்று முனிவர் எண்ணினார்.

அறிவுரை

முனிவர், “அம்மா! அப்பனே! உங்கள் மனம் பால் போன்றது. உங்களை மனப் பூர்வமாக வாழ்த்துகின்றேன். உங்களுக்கு மங்களம் உண்டாவதாக. ஓர் உத்தமமான தத்துவத்தை உங்களுக்கு உபதேசிக்கின்றேன். ஒருமைப்பட்ட உள்ளத்துடன் கேளுங்கள்.

“அறிவுடையவன் அறிவுடையவனிடம் சேருவான். இனம் இனத்துடன் சேரும்; குடியன் குடியனுடன் சேருவான்; பொடியன் பொடியனுடன் சேருவான்; தடியன் தடியனுடன் சேருவான்; கள்ளன் கள்ளனுடன் சேருவான். இதுதான் உல நியதி. இந்த உடம்பு அசித்து (அறிவில்லாதது) உயிர் சித்து (அறிவுடையது). சித்து சித்துடன் சேரும். அசித்து அசித்துடன் சேரும். ஆனால் இந்த நியதிக்கு மாறாக, உயிராகிய சித்துப் பொருள் உடம்பாகிய அசித்துடன் சேர்ந்துள்ளது.

“மாட்டு வண்டியைப் பாருங்கள். மாடு சித்து; வண்டி அசித்து. மாடு தானே சென்று வண்டியில் நுழையாது; வண்டியும் தானே போய் மாட்டின் மேல் ஏறாது. எப்படி மாடும் வண்டியும் ஒன்றுபட்டுள்ளன? வண்டிக்கும் மாட்டுக்கும் எஜமான், மாட்டை இழுத்துப் பிடித்து வண்டியின் நுகத்தடியை மாட்டின் கழுத்தில் வைத்துப் பூட்டாங் கயிறு பூட்டி, வண்டியில் அமர்ந்து அதனைச் செலுத்துகின்றான்”.

இது போல் அந்த அந்த உயிர்களை, அதனதன் கர்மங்களுக்கு ஏற்ப அந்த அந்த உடம்புக்குள் சேர்த்துப் பிராணவாயுவாகிய பூட்டாங்கயிற்றைப் பூட்டி இறைவன் உள்ளே அந்தர்யாமியாக இவற்றைச் செலுத்திக்கொண்டிருக்கின்றான். கடவுவதாலே கடவுள் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டுது.

“அவிழ்த்து விடுகின்ற நேரம் மாட்டுக்கும் தெரியாது; வண்டிக்கும் தெரியாது. அதுபோல் இந்த உயிர் உடம்பினின்றும் பிரிகின்ற காலம் யாருக்கும் தெரியாது. ஜோதிட நூல் வல்லான் தடபுடலாக ஜாதகக் குறிப்பைப் பார்த்துச் சண்டப் பிரசண்டமாகப் பலாபலன்களைக் கூறுவான். ஆனால் உயிர் பிரியும் மரணத்தை நிச்சயிக்க முடியாது”.

“அதலால் உயிர் பிரிகின்ற மரணம் வருமுன் இறைவனுடைய சரணத்தை அடையவேண்டும். இதுதான் வேதரகசியம். வேத இருதயமாக விளங்குவது ‘சிவாய நம’ என்ற ஐந்தெழுத்து. இதனை நீவிர் ஓதி உய்வு பெறுங்கள்” என்று நுட்பமான தத்துவத்தை இனிது உபதேசித்தருளினார்.

தியாக சிகரம்.

இரவு 11 நாழிகை. உறங்க வேண்டிய நேரம். அந்தக் குகையில் இருவர் மட்டும்தான் உரங்கமுடியும். மூவர் உறங்க முடியாது.

ஆகுகன் முனிவரை நோக்கி மொழிகின்றான்; “ஞனத் தந்தையே! இந்தக் குகையில் இருவர் மட்டுமே படுக்க முடியும். நானும் இவளும் படுத்து, தேவரீர் வெளியே படுத்தால், விலங்குகள் உம்மைக் கொன்றுபோடும். தேவரீரும் நானும் படுத்து, இவள் வெளியே படுத்தால் அபலையாகிய இவளைச் சிங்கம் புலி முதலிய கொடிய விலங்குகள் கொன்றுவிடும். நான் ஆயுதபாணி. நான்தான் வெளியே இருக்க வேண்டும்.

தாங்கள் ஆசாபாசமற்ற அருந்தவச் சீலர். இவள் பரம பதிவிரதை. தந்தையும் மகளும் ஒன்றாக இருக்கலாம். பிழையில்லை. எனவே நீரும் இவளும் உள்ளே படுத்து உறங்குங்கள். அடியேன் ஆயுதம் ஏந்தி வெளியே இருப்பேன்” என்றான்.

மாதவ முனிவர் வேடனுடைய மாசற்ற மனப்பண்பை எண்ணி அக மகிழ்ந்தார். “என்ன பண்பு! என்ன தியாகம்! மனைவியுடன் மற்றொருவன் தனிமையில் இருக்க எவன் உடன்படுவான்? இவனைப் போன்ற உத்தமர்களைக் காண்பது அரிது” என்று எண்ணி இதயம் உருகினார். அவனுடைய வேண்டுகோளை மறுக்க இயலாது அன்புக்குக் கட்டுப்பட்டார்.

குகைக்குள்ளே முனிவரும் ஆகுகியும் படுத்தார்கள். கதவை மூடி, வில்லேந்திய கையுடன் குகைப்பாறை மீது சாய்ந்து இமையாது நின்றான் ஆகுகன். திருஐந்தெழுத்தை உச்சரித்தவண்ணம் முனிவர் உறங்கினார். பதியின் பதமலரைச் சிந்தித்த வண்ணம் ஆகுகி கண்ணயர்ந்தாள்.

நடுஇரவு, எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. நாயும் பேயும் உறங்குகின்ற நேரம். வேடனும் சிறிது கண்மூடி நின்ற வண்ணமே உறங்கிவிட்டான். கையிலிருந்து வில் நழுவி விட்டது. இரைதேடி வந்த சிங்கம் அவனை அடித்துக் கொன்று தின்றுவிட்டுச் சென்றது.

விடியற்காலை. கணவனைச் சிந்தித்த வண்ணம் ஆகுகி கண்விழித்தாள். சிவத்தைச் சிந்தித்த வண்ணம் முனிவர் விழித்தார். ஆகுகி கதவைத் திறந்து வெளியே வந்தாள். எலும்பு கூடாக இருந்த கணவனைக் கண்டாள். அவள் உத்தமபத்தினி. “ஆ! பிராணநாதா!” என்று அலறினாள்; கணவனுடைய எலும்புக் கூட்டின் மீது சாய்ந்தாள்: அக்கணமே மாய்ந்தாள். முனிவர் இந்த அவலக் காட்சியைக் கண்டு வருந்தினார்.

“அந்தோ! விதி செய்த விளையாட்டு என்னே! நம்மால் இந்த இருவரும் மாய்ந்து விட்டார்கள். பெற்ற பிள்ளைகளைப் போலே இடம் தந்து, உணவு தந்து, இன்சொல் கூறி உபசரித்த இவர்கள் முடிவு பெற்றார்கள். நான் மாண்டிருந்தால் யாருக்கும் நஷ்டம் இல்லை. இந்த வேடர் பெருமான் பரம உபகாரி. இந்தக் காட்டுக்கு வரும் வழிப்போக்கர்களுக்கு நலம் செய்பவன். கணவன் மறைந்த கணமே இவள் உயிர் துறந்தாளே? எத்தனை அன்பு!” என்று கூறிப் புலம்பியழுதார்.

ஓமாக்கினியை வளர்ந்தார்; மந்திர நீரால் இரு உடம்புகளையும் அலம்பினார். கட்டைகளை அடுக்கி இரு உடம்புகளையும் வைத்து ஓமாக்கினியை வைத்து மூட்டினார். இரு பிணங்களும் தீயில் வேவதைப் பார்த்து அவரால் துயரம் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த எரியும் நெருப்பில் அவரும் மூழ்கி விட்டார். மூவருடைய ஆன்மாக்களும் சாந்தியடைந்தன.

முனிவருக்கு உணவும் இடமும் தந்த தியாகத்தின் பயனாக ஆகுகன் என்ற வேடன் நளச் சக்கரவர்த்தியாகப் பிறந்தான். கற்புடைய ஆகுகி தமயந்தியாகப் பிறந்தாள். முனிவர் பெருமான் அன்னமாகப் பிறந்து, தம்மால் பிரிந்த தம்பதிகளைத் தூது சென்று ஒன்றுபடுத்தினார்.